சென்னைக்கு ஓவர் ஓவர் இன்றோடு முடிகிறது மழை! அடுத்த வளிமண்டல மேலடுக்கு எப்போது? வெதர்மேனின் அப்டேட்
சென்னை: சென்னையில் இன்றுடன் மழை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி எப்போது தொடங்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதளங்களில் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து தமிழக கடற்கரையிலிருந்து தள்ளி சென்றுவிட்டது. மயிலாடுதுறை, காரைக்கால், நாகை ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை மழை பெய்யும்.

திருவனந்தபுரம்- கன்னியாகுமரி கடலோரத்தில் வளிமேலடுக்கு சுழற்சி வலுவிழந்துள்ளது. இதன் மூலம் நேற்று போல் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்கள், கேரளாவில் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களில் மழை பெய்யும்.
கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், நெல்லை, தேனி, மயிலாடுதுறை மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கால் பெய்யும் மழை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 19 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களான சென்னை, உள்மாவட்டங்களில் மழை பெய்யும்.
எனவே தற்போது 2 அல்லது 3 நாட்கள் மழை இல்லாத நாட்களாக இருக்கும். சென்னையில் இங்கும் அங்கும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். அது போல் நேற்றைய தினம் எந்தெந்த பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது என்பது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் 76 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் சிவலோகத்தில் 67.2 மி.மீ., தக்கலையில் 58.2 மி.மீ, திருவள்ளூரில் கும்மிடிப்பூண்டியில் 49 மி.மீ., சென்னை ஆட்சியர் அலுவலகதி்தில் 34.7 மி.மீ., மண்டலம் 8 மலர் காலனியில் 34.2 மி.மீ., மண்டலம் 6, திருவிக நகரில் 33 மி.மீ., தண்டையார்பேட்டை சிடி மருத்துவமனையில் 32.5 மி.மீ., மண்டலம் 1 இல் கத்திவாக்கத்தில் 27 மி.மீ மழையும் பெய்துள்ளது.
அது போல் மயிலாடுதுறையில் சீர்காழியில் 34.6 மி.மீ. மழையும் நெல்லையில் அம்பாசமுத்திரத்தில் 33 மி.மீ. மழையும் கன்னியாகுமரியில் பெருஞ்சானி பகுதியில் 27.6 மி.மீ. மழையும் தேனியில் தேக்கடியில் 27.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்றுடன் மழை ஓய்ந்தது. இன்று காலை முதல் சூரியன் வந்துவிட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications