அதிகபட்ச மழை சென்னையில் இல்லையாம்.. பதற்றம் எதற்கு? பாலச்சந்திரன் விளக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகபட்ச மழை பெய்திருக்கிறது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெல்ல தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் கடற்கரையை நோக்கி நகர தொடங்கியது. இன்று காலை இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இப்படி இருக்கையில் மழையின் தீவிரம் அதிகரித்தது. மழை குறித்து இன்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிக்கையில்,

"நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, இன்று 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் மழை குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று பேட்டியளித்திருந்தார். அதில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்திருக்கிறது. 42 இடங்களில் கனமழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் கனமழை பெய்திருக்கிறது. இங்கு 13 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. அடுத்தபடியாக கும்மிடிப்பூண்டி மற்றும் எண்ணூரில் 10 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
தற்போது தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்" என்று தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் அதிகனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டையில் அதிகனமழை பெய்திருப்பது சென்னை மக்களை சற்று ஆறுதலடைய செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications