நீலகிரியின் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. புதுச்சேரி மாஹேவில் கல்வி நிறுவனங்களுக்கும் லீவ்
நீலகிரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும், புதுச்சேரியின் மாஹேவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தொடக்கத்தில் மந்தமாக இந்த பருவமழை இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தொடர் மழை மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மாணவ - மாணவிகளின் நலன் கருதி நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்தா தனீரு வெளியிட்டுள்ளார்.
அதேபோல் புதுச்சேரியின் மாஹேவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மாஹேவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காராக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாஹே பிராந்தியம் என்பது கேரளாவை ஒட்டியுள்ளது.
கேரளாவில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மாஹேவில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட திட்டமிட்டபடி இன்று தேர்வுகள் நடைபெறும் எனவும் பிராந்திய நிர்வாகி மோகன்குமார் அறிவித்துள்ளார். இதன்மூலம் தேர்வு உள்ளவர்களுக்கு பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications