"பட்டர் ஃபிளை எஃபெக்ட்” இதான்.. இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுழற்சி! தமிழ்நாடு மழைக்கு சுவாரஸ்ய காரணம்
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணம், இந்தோனேசியா அருகே ஏற்பட்ட காற்று சுழற்சியின் தாக்கம் என்கிறார் தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "தென் சீனக்கடலில் இருந்து வருகை தரக்கூடிய ஈரப்பதமிகுந்த கீழைக்காற்று வலுவடைந்து காணப்படுகிறது. தெற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை கீழைக்காற்று மழையை தீவிரப்படுத்தும். சுமத்ரா (இந்தோனேசியா) கடலோர பகுதிகளில் நீடித்த காற்று சுழற்சியின் விளைவாக காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் உருவாகியுள்ளது. இதன் விளைவாக அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு மத்திய வங்ககடல் & அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடும்.

தமிழகத்தில் மூன்றாம் சுற்று வடகிழக்கு பருவமழை நாளை (01.12.2023) வரை தீவிரமாக நீடிக்கும், சில மணி நேர இடைவெளியில் நாளை மாலை நேரத்தில் துவங்குகிறது நான்காம் சுற்று வடகிழக்கு பருவமழை. இன்று (30.11.2023) வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோர மாவட்டங்களில் பகலிலும் விட்டு விட்டு கனமழை எதிர்ப்பார்க்கலாம். இரவு/ அதிகாலை நேரத்தில் பரவலாகவும், தீவிரமாகவும் மழைப்பொழிவு இருக்ககூடும்.
கடலோர தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்டத்தின் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமானது முதல் சற்றே கனமழை பதிவாகும், ஒருசில இடங்களில் கனமழை பதிவாகும்.
சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிக கனமழை பதிவாக கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களான இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை விருதுநகர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகும்.
மேற்குறிப்பிடப்படாத மேற்கு / கொங்கு மாவட்டங்களில் மழை வாய்ப்பு குறைவு, ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை இரவில் பதிவாகலாம். டிசம்பர் 1ம் தேதி காலை வரை இந்த மூன்றாம் சுற்று பருவமழை தொடரும். நாளை மாலை நான்காம் சுற்று வடகிழக்கு பருவமழை துவங்கும்." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications