இன்னைக்கு நைட் விடாது போல.. அடுத்த 1 மணி நேரம்.. விளாசப் போகுது மழை.. 18 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று இரவு மழை விட்டு விளாசப் போகுது என்பது போல் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி என 18 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெயிலும், ஒருசில இடங்களில் மழையும் என விடாமல் கொளுத்தி எடுக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று வழக்கத்தை விட அதிகமாகவே மழை கொட்டி தீர்த்தது.

18 மாவட்டங்களுக்கு அலர்ட்
இது ஒருபுறம் என்றால் சென்னை உள்ளிட்ட ஒருசில இடங்களில் வெயில் அடித்து வருகிறது. ஆனால் கோவை, நீலகிரி, டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இந்த நிலையில் இன்று இரவு மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கும், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தர்மபுரி, திருவண்னாமலை ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.
அடுத்த ஒரு வார அப்டேட்
முன்னதாக இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
குறிப்பாக இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்
நாளை திங்கட் கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், இண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
21 ஆம் தேதி வரை
17-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
18-06-2025 முதல் 21-06-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (16-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்சயநிலை 2 to செல்சியஸை ஓட்டியும் இருக்கக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications