குடையை ரெடியா வச்சுக்கோங்க! அடுத்த 3 மணி நேரம் விருதுநகர் - குமரி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு சான்ஸ்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என்று நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் விருதுநகர் முதல் குமரி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை விடைபெற்றுவிட்டது. எனினும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று குறிப்பாக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், காரைக்காலில் ஒருசில இடங்களிலும் மழை பெய்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மதியம் வெளியான வானிலை அறிவிப்பில், இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலையில் வெளியான வானிலை நிலவரத்தில், தமிழகத்தில் விருதுநகர் முதல் குமரி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஞாயிற்றுக் கிழமைகளில் பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளைகளில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
பிப்.3ஆம் தேதியான நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் பிப்.4 முதல் பிப்.8 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. காரைக்கால பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications