சென்னையில் இன்று இரவு பலத்த மழை பெய்யும்! வேறு எந்தெந்த மாவட்டங்களில் மழை? பிரதீப் ஜான் கணிப்பு
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அத்துடன் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய நல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும். சென்னை நகரில் என்ன மாதிரியான கடல் காற்று வீசுகிறது தெரியுமா? பக்காவான மழைக்கு தேவையான ஈரப்பதத்துடன் அந்த காற்று சென்னைக்குள் நுழைந்துள்ளது.

நேற்று முன் தினம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்றைய தினம் செங்கல்பட்டில் மட்டும் மழை பெய்தது. இன்று மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய போகிறது.
கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மழை பெய்து வந்த நிலையில் இன்று திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி எடுத்த நிலையில் இன்று இரவு பெய்யும் மழையால் பூமி குளிர்ச்சி பெறும். மக்கள் மனங்களும் குளிரும்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காரணமாக சென்னை, கரூர், திண்டுக்கல், மதுரை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. மேலும், கோவை, நீலகிரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்றும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். இதேநிலை 15ம் தேதி வரை நீடிக்கும். இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் நேற்று 102 டிகிரி வெயில் நிலவியது.
இன்றும் அதே அளவில் வெயில் இருக்கும். மாலையில் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்று முதல் 13ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். மேலும், மத்திய மேற்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு, தென்மேற்கு மற்றும் வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60கிமீ வேகத்தில் இன்றும் நாளையும் வீசும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications