மாறுதே கிளைமேட்.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் பெரிய மழை இருக்காது.! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த ஒரு வாரத்திற்கு மாநிலத்தில் பெரியளவில் மழை இருக்காது என்றும் மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இன்றைய தினம் தென் மற்றும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடதமிழகத்தில் கணிசமாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் கூட சென்னை உட்பட பல புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது.

மழை பெய்யும்
இந்தச் சூழலில் தான் கடந்த இரு நாட்களாக மாநிலத்தில் மழையின் அளவு குறைந்தது. இதற்கிடையே இனி வரும் நாட்களில் மழை குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்குத் தமிழகத்தில் பெய்யும் மழை கணிசமாகக் குறையும் என்றும் வானிலை மையம் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்றைய தினம் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் டிசம்பர் 12ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (08-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழகக் கடலோரப்பகுதிகளில் இன்று எச்சரிக்கை ஏதுமில்லை. அதேநேரம் நாளை முதல் டிசம்பர் 10 வரை தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால் மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications