அடுத்த 14 நாட்களுக்கு மழை நிற்காது.. சென்னை + நீலகிரிக்கு குட் நியூஸ் இருக்கு.. வெதர்மேன் நறுக்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அடுத்த 10- 14 நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யும் என்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் அதிகரித்து வருகிறது.

அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கூட காலை நேரத்தில் மழை இல்லை என்றாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள்: இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடுத்த இரண்டு வாரத்திற்கு மழை தொடரும் என்று பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை மேகங்கள் உருவாகும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அடுத்த 10- 14 நாட்களுக்கு மழை நிற்காது.. மேட்டூர் அணைக்கு நல்ல நீர்வரத்து இருக்கப் போகிறது.. தலைகாவிரியில் இன்று 230 மி.மீ மழை பெய்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் கேஆர்எஸ் அணை திறக்கப்படும். அடுத்த வாரத்தில் கர்நாடக அணையில் இருந்து மேட்டூருக்கு 1 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
நீலகிரி (அவலஞ்சி- பந்தலூர்- தேவாலா-போர்த்திமுண்ட்- அப்பர்பவானி- பார்சன்ஸ் பள்ளத்தாக்கு) மற்றும் வால்பாறையில் கனமழை தொடரும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் மாலை நேரங்களில் வேகமாக நகரும் மழை மேகங்கள் உருவாகும்.. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகளில் இனிமையான வானிலை தொடரும். இந்த சில் வானிலையை என்ஜாய் செய்யவும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்; கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications