இன்று இரவு 10 மணிக்குள்.. 30 மாவட்டங்களில் மழை சாறெடுக்கப் போகுது.. வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நெல்லை, ராமநாதபுரம், குமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தைவிட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த மே 30 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் அதிகமாக மழை கிடைக்கும் கேரளா, கர்நாடகாவில் இந்த முறை குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை.
வடமாநிலங்களிலும் கடந்த வாரம் வரை மழை தொடங்காமல், கடும் வெயில் வாட்டி வதைத்தது. சில நாட்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பருவமழை தீவிரமாக இருந்ததால், கடந்த ஜூன் 1 முதல் 30-ம்தேதி வரை 109 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 50 மி.மீ. அளவு மழை மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் வழக்கத்தைவிட கடந்த மாதம் 115 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.
மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 417 சதவீதம், விருதுநகரில் 292, திருச்சியில் 249, கரூரில் 246, தேனியில் 238, ராமநாதபுரத்தில் 216,சென்னையில் 210, புதுக்கோட்டையில் 201 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications