டெல்டா மாவட்டங்களில் அதிகாலை முதல் கொட்டும் மழை.. பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் அவதி!
தஞ்சாவூர்: தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
இந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. மிக்ஜாம் புயல் சென்னையில் கரையைக் கடக்கவில்லை என்றாலும், அந்த புயல் நீண்ட நேரம் சென்னைக்கு அருகே நிலைகொண்டிருந்தது. இதனால் சென்னையில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, கடந்த 17, 18ஆம் தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த 4 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் சில இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு, சீர்காழி, தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்து வருகிறது.
மேலும், கும்பகோணம், திருவிடைமருதூர், அம்பாசமுத்திரம், திருநாகேஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர், சிக்கல், பொரவச்சேரி, திருமருகல், போலகம், நரிமணம், உத்தமசோழபுரம் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பொழிந்து வருகிறது. டெல்டா பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நாளை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications