வெயிலுக்கு மத்தியில் ராமேஸ்வரத்தில் வெளுத்துக் கட்டிய மழை.. 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பதிவு!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. தங்கச்சிமடம், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தலா 3 செ.மீ மண்டபத்தில் 2 செ.மீ மழை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ராமேஸ்வரம் மழையால் குளிர்ந்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. பருமழைக்கு பின்பு வெயில் அடிக்கத் தொடங்கிய நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி மாதம் முழுவதும் பகலில் வெயிலும் இரவில் பனிப்பொழிவுமாக வானிலை நிலவி வந்தது. தற்போது தமிழ்நாடு முழுவதுமே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து பிறகு பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் ஆறாக ஓடி ராமேஸ்வரம் நகராட்சி முன்பு மழைநீர் தேங்கியது.
ஒரு மாதமாக வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது நன்றாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பள்ளிக்கு சென்ற மாணவர்கள் தேங்கிய நீரில் நடந்து சென்று சிரமத்திற்கு உள்ளாகினர்.
கேரளாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 27) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இதே மாவட்டங்களில் சில இடங்களில் வரும் மார்ச் 1-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 35.6-37.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். நாளை முதல் வரும் 1-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 89.6-91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 73.4-75.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications