விடாமல் கொளுத்தும் மழை.. கோவை, நீலகிரிக்கு இன்றும் ரெட் அலர்ட்.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நெல்லை, தென்காசி, குமரி, தேனி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் இந்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா மற்றும் கேரளாவின் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

குறிப்பாக கோவை மற்றும் நீலகிரியில் நேற்று முன் தினமும், நேற்றும் கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாது மழை பெய்து வருவதாலும், அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாலும் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
நேற்று கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் இன்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் கொங்கன் கடற்கரையை கடந்து, படிப்படியாக வலு குறைந்து, வடக்கு உள் கர்நாடகாவில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. இது மேலும் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதுமட்டுமல்லாமல் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பரவத் தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications