கடவுள் தேசத்தை மிரட்டும் மழை.. கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. அதி கனமழை எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 முதல் 24 செமீ வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது வெயில் காலம் முடிந்து பருவமழை காலம் தொடங்கியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்கு பருவமழையின் மூலமே மழைப்பொழிவு பெறுகிறது. அந்தமானில் கடந்த 13 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது.

வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்பே பருவமழை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. அதன்பிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் மே மாதமே பருவமழை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களுக்குக் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாளை 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கன்னுர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 7 முதல் 20 செ.மீ மழை வரை அடுத்த 24 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள சூழலில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குமரகோமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12 செ.மீ மழை பெய்துள்ளது. கன்னூர் மற்றும் காசர்கொடு ஆகிய மாவட்டங்களும் மழை கொட்டி தீர்த்தது. தலைநகர் திருவனந்தபுரத்திலும் கனமழை மற்றும் மேகமூட்டமாகவே 25 ஆம் தேதி (இன்று) காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications