ரெட் அலர்ட்.. கொட்டப்போகும் கனமழை! கோயம்புத்தூர், நீலகிரிக்கு விரைந்தது பேரிடர் மீட்புப்படை!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரம் அடைந்திருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து இரண்டு மாவட்டங்களுக்கும் மாநில பேரிடர் மீட்புப்படை விரைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார்.

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வருகிறது. எனவே மழையின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கோவை, நீலகிரியில் மே.25, மே.26ம் தேதியன்று அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கனமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. எனவே, இரு மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களுக்கும் 3 மாவட்ட பேரிடர் மீட்பு படைகளும், ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படைகளும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட தீயணைப்புத்துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.
நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும்.
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.
எனவே, சனிக்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.27ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த வரை, மே.24 முதல் 27 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த வரை, மே.24 முதல் 27 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, மே.24ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications