ரெமல் புயல் எதிரொலி! தனுஷ்கோடியில் 700 மீட்டருக்கு கடல் அரிப்பு! உள் வாங்கிய ராமேஸ்வரம் கடல்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் ரெமல் புயல் எதிரொலியாக 700 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் ரெமல் என்ற புயல் உருவாகியுள்ளது. இதற்கு ரெமல் என ஓமன் நாடு பெயர் வைத்துள்ளது. இந்த புயலின் பெயருக்கு அரபி மொழியில் மணல் என்று அர்த்தம்.

கடந்த 21 ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாநது. இது படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கடந்த வெள்ளிக்கிழமை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு புயலாக மாறியது. இன்று தீவிர புயலாக வங்கதேசம்- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கிறது.
இந்த புயலின் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 700 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ராமேஸ்வரம் கடற்கரையில் 300 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டின.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று காலை 0530 மணி அளவில் வலுப்பெற்று, 0830 மணி அளவில் வங்க தேச கேப்புப்பாரா-வில் இருந்து சுமார் 440 கி.மீ தெற்கு தென்மேற்கேயும், மேற்கு வங்காளம் சாகர் ஐலன்ட்டிலிருந்து 440 கி.மீ தெற்கு தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (25.05.2024) மாலை புயல் ஆக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து, நாளை (26.05.2024) காலை தீவிர புயலாக வலுப் பெற்று நாளை (26.05.2024) நள்ளிரவு வங்க தேச-கேப்புப்பாராவிற்கும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110 முதல் 120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மூன்று மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
இன்றைய தினம் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.05.2024 முதல் 31.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
25.05.2024 முதல் 29.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
25,05,2024: அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/ இயல்பை விட சற்று குறையக்கூடும்.
26.05.2024: அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
27.05.2024 முதல் 29.05.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை. தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும்/இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகப்பட்ச வெப்பநிலை 38°-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39°-40° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications