மழை குறைந்ததுமே மீட்பு பணிகளில் வேகம்.. திருச்சியில் இருந்து 5 பஸ்களில் கிளம்பிய தூய்மை பணியாளர்கள்
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை முழுவதுமே கடந்த 2 தினங்களாக மழை கொட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று நள்ளிரவில் இருந்து தற்போது வரை சென்னையில் விடாது பெய்த பேய் மழையால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அண்ணா சாலை உள்ளிட்ட்ட சென்னையின் முக்கிய பகுதிகள் கூட வெள்ளத்தில் தத்தளித்தது. பலத்த மழை கொட்டி வருவதால், சென்னையே தனித்தீவு போல காணப்படுகிறது..

சாலைகளில் எல்லாம் நீர் பெருக்கெடுக்கிறது.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சென்னை மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, சாந்தோம், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, வள்ளுவர் கோட்டம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர், கே.கே.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய தேவைக்கு கூட மக்கள் வெளியே வர முடியாத சூழல் நிலவி வருகிறது. தாம்பரத்தில் 7 வழித்தடங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை மற்றும் முக்கிய சாலைகளில் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து கிடந்தன.
சாலைகளில் ஆங்காங்கே பள்ளச்சாிவுகளும் , திடீர் குழிகளும் ஏற்பட்டன. அதேபோல, மழை நீா் வாகனங்கள் மூழ்கியதால் வாகன உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் தற்போது மழை சற்று குறைந்துள்ள நிலையில், மீட்பு பணிகளுக்கு மாநகராட்சி முழு வீச்சில் தயராகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்துள்ளனர்.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு விரைந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புயல் மற்றும் கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் 250 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் 3 குழுக்கள் பெங்களூரில் இருந்து வரவழைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்க தூய்மை பணிக்காக திருச்சியில் இருந்து 3 பஸ்களில் 250 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு வந்துள்ளனர். கடந்த 3 நாட்களாக சென்னையை புரட்டி போட்ட மழையின் பாதிப்பு வெகு விரைவிலேயே சீர் செய்யப்படும் என எதிபார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications