இன்னைக்கு லீவு இல்லை பசங்களா.. சென்னை ஆட்சியர் அறிவிப்பு! பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் மழை வெளுத்து எடுத்தது. இன்று காலை 10 மணிவரை சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வடகிழக்கு பருவமழையும் சேர்ந்து சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழையை கொடுத்தது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல, விமானம் மற்றும் ரயில் சேவை சில ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக அக்.16ம் தேதி, வெளி மாநிலங்களிலிருந்து வந்த ரயில்கள் சென்னைக்குள் நுழைய முடியாமல் தவித்தன.

கோவை, பெங்களூர், மும்பை, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ரயில்கள் அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி போன்ற ரயில் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்களும், மேற்குறிப்பிட்ட ரயில் நிலையங்களிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர்.
மழையை பொறுத்தவரை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. எனவே, மழையின் தீவிரம் சென்னையில் இல்லை. நேற்று வெயில் அடித்த நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலையில் இடி, மின்னலுடன் சென்னையில் மழை வெளுத்து வாங்க தொடங்கியது. காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூருக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டது.
எனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியர், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை எதுவும் கிடையாது என்று தெளிவாக கூறியுள்ளார். இதனையடுத்து இன்று கல்வி நிலையங்கள் வழக்கம்போல செயல்படுகின்றன.












Click it and Unblock the Notifications