‘செக்’கை உதயநிதியிடம் கொடுத்த சிவகார்த்திகேயன்.. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!
சென்னை: வெள்ள நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னையில் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மழை நீர் உள்ளே புகுந்தது. 3 நாட்களுக்கும் மேலாக பாதிப்பு இருந்ததால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு நிலைமையை சரிசெய்ய துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக சினிமா நடிகர்களும் பங்களிப்பு செய்து வருகிறார்கள். வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும் முதல் ஆளாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து ரசிகர்கள் தன்னார்வலர்களாக களத்தில் செயல்பட வேண்டும் என்று விஜய் தனது ரசிகர்களை வலியுறுத்தியிருந்தார். அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னை புயல் வெள்ள நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "மிக்ஜாம் புயல், கன மழையைத் தொடர்ந்து கழக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. நம் அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள் - தனிநபர்கள் என பலரும் முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நம்மை சந்தித்த போது, நடிகர் சகோதரர் சிவகார்த்திகேயன் , ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும் - நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம் - இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications