சம்மருக்கு சீக்கிரமே எண்டு கார்டு.. சீக்கிரமே தொடங்கும் மழைக்காலம்.. முன்கூட்டியே வருது பருவமழை
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்த வருடம் மே மாதம் கடைசி வாரமே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை எல்லா வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி 4 மாதங்களுக்கு செப்டம்பர் வரை வீச கூடிய தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஏற்பட கூடிய மழை ஆகும். இந்த மழையில் சிறிய அளவு மாற்றம் ஏற்பட்டாலும் கூட இந்தியாவின் மொத்த விவசாயத்தில் பெரிய பாதிப்பும், இழப்பும் ஏற்படும். கேரளா டூ வட இந்தியா, மேற்கு தமிழ்நாட்டில் இதுதான் மழையை கொடுக்கும்.

கடந்த வருடம் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. கடந்த வருடம் இந்த நிலையில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை முதல் இரண்டரை வாரங்கள் நன்றாக மழையை கொடுத்தது. ஜூன் 19க்கு பின் திடீரென குறைந்த மழை, அப்படியே காணாமல் போனது. அதன்பின் மீண்டும் ஜூலை 8ம் தேதியில் இருந்து மீண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கி ஓரளவு பெய்தது. கடந்த 5 வருடங்களாகவே தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருந்தது.
விரைவில் தொடங்கும்: இந்த நிலையில்தான் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த வாரத்திற்குள் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி வடக்கு நோக்கி செல்லும். ஜூலை நடுப்பகுதியில் இந்தியா முழுவதையும் வந்தடையும். ஆனால் இந்த முறை மே பாதியிலேயே இந்த மழை தொடங்கி உள்ளது.
மறுபுறம், மே 16 முதல் வடமேற்கு இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை வடமாநிலங்களை வந்தடையும் முன் வடமேற்கு இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென் தீபகற்ப இந்தியாவில், ஈரமான நிலை மே 17 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்த பகுதிகளில் கடுமையான வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் அளிக்கும். கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவும் மே 14 வரை ஈரமான காலநிலையை அனுபவிக்க வாய்ப்புள்ளது, இது நடைமுறையில் உள்ள வறண்ட வானிலையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும்.
இதற்கிடையில், இந்த வாரம் முழுக்க மத்தியப் பிரதேசத்தின் பிராந்தியங்களில் ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது.மேலும், மத்திய மும்பை, நவி மும்பை, பால்கர், தானே மற்றும் மகாராஷ்டிராவின் அருகிலுள்ள பகுதிகளுக்கு இன்று அடுத்த 48 மணி நேரத்திற்கு IMD இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கான கனமழை முதல் லேசான கனமழை வரை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .
1. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
2. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
16.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர், மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications