மழை இருக்கு, ஆனா..! ட்விஸ்ட் கொடுத்த வானிலை.. அப்போ கிளைமேட் எப்படி தான் இருக்க போகுது! புது தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் ஓரளவுக்குக் குறைந்து நல்ல ஒரு வானிலையே நிலவியது. ஆனால், அதன் பிறகு உடனடியாக மீண்டும் வெயில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பெரும்பாலான இடங்களில் இப்போது வெப்பம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைப் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் ஓரளவுக்குக் குறைந்தது. அதேநேரம் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாகச் சேலத்தில் 37.2° செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாகப் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

வெப்பம்
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 34 - 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31 - 35° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை
வரும் நாட்களில் நிலவும் வானிலை தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாற்றம் இருக்காது
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்று முதல் மார்ச் 20 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு என்பது இன்று முதல் மார்ச் 20 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (16-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (17-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வருகிறது. மதிய நேரங்களில் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் இருக்கிறது. மழை வந்தால் கொஞ்சமாவது வெப்பம் குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று மழை இருக்கும் என்றாலும் அது பரவலாக இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெப்பமே தொடரும் சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications