தீயணைப்பு வீரர் தோளில் உப்பு மூட்டை.. வாங்கிக் கட்டிக்கொண்ட சூரத் துணை மேயர்
சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற துணை மேயர் தீயணைப்பு வீரரின் தோளில் தூக்கிச் செல்லப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
குஜராத் மாநிலம், சூரத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்புப் படை வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சூரத் நகரின் துணை மேயரும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான நரேந்திர பாட்டில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் சென்ற பகுதி மிகவும் சேறும் சகதியுமாக இருந்தது. சேற்றில் இறங்கி ஆய்வு செய்தால் தனது உடை மற்றும் காலணி சேதமாகும் என எண்ணி அருகில் இருந்த தீயணைப்புப் படை வீரரை அழைத்து தன்னை தோளில் சுமந்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, துணை மேயர் நரேந்திர பாட்டிலை தீயணைப்புப்படை வீரர் தனது தோளில் சுமந்து சென்றார். இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் கடும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. சூரத் துணை மேயரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தீயணைப்பு அதிகாரி சுனில் சவுத்ரி கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை மேயர் பார்வையிட்டார். அப்போது, ஒரு கட்டடத்தில் 35 அடி ஆழத்தில் வெள்ளத்தில் சிக்கியவரின் உடலை வெளியே கொண்டு வரும் பணி நடந்து வந்தது. அப்போது, துணை மேயர் நரேந்திர பாட்டில் பல மணி நேரம் நின்று பணிகளை பார்வையிட்டதால் அவருக்கு காலில் அசெளகரியம் ஏற்பட்டது. கால்களில் அதிக வலி இருந்ததால் சேறும், சகதியுமான பகுதியைக் கடக்க என் தோளைப் பயன்படுத்தினார். பொதுமக்களுக்கு உதவ சூரத் தீயணைப்பு அதிகாரிகள் ஒருபோதும் தயங்க மாட்டோம். இது ஒரு பெரிய பிரச்னை இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications