சென்னைக்கு விரைந்த 6 பேரிடர் மீட்புக் குழுக்கள்.. “ரெட் அலர்ட்” காரணமாக அச்சம்.. ரெடியானது அரசு!
சென்னை: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நெல்லையில் இருந்து சென்னை விரைந்துள்ளது தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை. சென்னையில் ஏற்கனவே 3 பேரிடர் குழுக்கள் உள்ள நிலையில் மேலும் 6 குழுக்கள் சென்னை விரைந்துள்ளன.
சென்னையில் நேற்று (அக்டோபர் 13) விடிய விடிய இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, சென்னையில் நேற்று இரவு முதல் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கி உள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளான கிண்டி, அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, நந்தனம், ஆலந்தூரில் கனமழை பெய்தது.

சென்னையில் இன்று கனமழையும் அக்டோபர் 15, 16 ஆம் தேதிகளில் மிக கன மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் இதுவரை தென்மேற்கு பருவமழை இயல்பை விட 66 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளது. சென்னையில் மிக கனமழை அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் வரும் 16 ஆம் தேதிரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினத்தில் இந்த மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை மக்கள் பதற்றமடைந்துள்ளனர். சுமார் 1 கோடி அளவிலான மக்கள் வசிக்கும் சென்னையில் கடந்த காலத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் அதிகளவு மழைநீர் தேங்கும் வேளச்சேரி, தாம்பரம், புறநகர் பகுதிகளில் உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு மோட்டார்கள், பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் சூழலில் அந்த பகுதிகளில் மழைநீர் தேங்கினால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யவும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை காரணமாக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான உணவு, குடிநீர் தடையில்லாமல் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பேரிடர் மீட்புக் குழுக்கள் சென்னைக்கு விரைந்துள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 18 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் குழுக்கள், கோவையில் 3 குழுக்கள், மேட்டுபாளையத்தில் 3 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு குழுவிற்கு 25 வீரர்கள் வீதம் 450 வீரர்கள் அனைத்து சாதனங்களுடனும் தயார் நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications