Tamil Nadu Rain Alert: 14 மாவட்டங்களுக்கு நைட்டு மழை இருக்கு.. லிஸ்ட் இதோ! உங்க ஊரு லிஸ்ட்டுல இருக்கானு பாருங்க
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில், ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (23-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (24-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கி இன்று வரை, சராசரியாக 201.9 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில் தமிழ்நாட்டின் இயல்பான மழையின் அளவு 185.7 மி.மீதான். அப்படியெனில் இயல்பை விட 9% மழை அதிகமாக பெய்திருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 350% மழை பதிவாகியிருக்கிறது. ஆனால் தூத்துக்குடியில் மைனஸ் 68% என மழை பதிவாகியிருக்கிறது. இம்மாவட்டத்தில் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை.
திருநெல்வேலியை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 59% அளவுக்கு மழை கூடுதலாக பதிவாகியிருக்கிறது. ஆனால் பக்கத்து மாவட்டமான நாகப்பட்டினத்தில் மைனஸ் 20% என மழை குறைவாக பதிவாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications