மழை புகுந்து விளையாடப் போகுது.. 7 மாவட்டங்களை சுத்துப் போட்ட மேகங்கள்! மெட் கொடுத்த அப்டேட்!
சென்னை: கோடைக்காலம் நிறைவடைந்து குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தாண்டு தொடக்கமே கடும் வறட்சியாக அமைந்த நிலையில் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெயில் கொளுத்தியது. மே மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. ஆனால் ஜூன் ஜூலை மாதங்களில் வெயில் மீண்டும் அதிகரித்தது.
இந்த நிலையில் கோடைக்காலம் முடிவடைந்து தற்போது குளிர்காலம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

வானிலை
இந்த நிலையில் தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இன்றும் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் பகுதியில் கடந்து செல்லவுள்ளது.
இன்று மழைக்கு வாய்ப்பு
மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
மழை தொடரும்
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° முதல் 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications