வாங்குற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை செய்யுங்க! வானிலை மைய தலைவர் பாலசந்திரனுக்கு வெதர்மேன் அட்வைஸ்
சென்னை: மழைக்காலங்களில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுகிறார்கள் என்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், "வாங்குற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை செய்யுங்க" என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் வானிலை கணிப்புகள் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கிறது. எந்த நேரத்தில் எங்கு, எவ்வளவு மழை பெய்யும் என்பதை துல்லியமாக வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறிவிட்டது என தமிழ்நாடு அரசே குற்றம்சாட்டியிருக்கிறது. குறிப்பாக 2023ல் தென்தமிழகமான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை முன்னறிவிக்கப்படாதது என்று விமர்சிக்கப்பட்டிருந்தது. அதேபோல 2024 பெஞ்சல் புயல் மழை குறித்தும் துல்லியமான அப்டேட்கள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன.

இதற்கிடையில்தான் தமிழ்நாடு வெதர்மேன் என்கிற பெயரில், தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் அடிக்கடி வானிலை முன்னறிவிப்புகளை கொடுத்து வந்திருந்தார். இவரை போலவே வேறு சில வானிலை ஆய்வாளர்களும் அப்டேட்களை கொடுத்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில், நேற்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்று பேசியிருந்த சென்னை வானிலை மையத்தின் தலைவர் பாலசந்திரன், "கனமழை காலத்தில் தனியார் வானிலை ஆய்வாளர்கள் புகழுக்காக பேசுகிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.

அவரது விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், "வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யுங்க. வெட்டி பேச்சு எதுக்கு? எதையும் எதிர்பார்க்காமல் வானிலை குறித்து தகவல்களை பகிரும் எங்களை போன்றவர்கள், பொதுமக்களுக்கு தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வருகிறார்கள்.
கடந்த 2023ம ஆண்டு நெல்லை, தூத்துக்குடி கனமழை மற்றும் 2024 பெஞ்சல் புயல் மழையை துல்லியமாக கணிக்க தவறியது குறித்து பொதுமக்கள், இந்திய வானிலை மையத்தின் மீது விசாரணையை கோர வேண்டும். மட்டுமல்லாது தோல்விக்கு இவர்களை பொறுப்பாக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் சம்பளம் நமது வரிப்பணம்தான்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications