நெல்லை, தூத்துக்குடியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்.. இதை கவனியுங்க
சென்னை: இந்த மாதம் இறுதியில் தென் மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தமிழ்நாடு வெதர்மேன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கிழக்கு திசை மாறுபாட்டின் காரணமாக, ஒரு சில இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே 30ம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

மேலும் ஆண்டின் இறுதி நாளான 31ம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என எச்சரித்திருந்தது.
முன்னதாக கடந்த 16 மற்றும் 17ம் தேதிகளில் இதுபோன்ற கனமழை பெய்ததால்தான் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யும் என்று மட்டுமே கூறியிருந்ததே தவிர, எவ்வளவு மழை பெய்யும் என்று தெரிவிக்கவில்லை. எனவே வெள்ள பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என தமிழக அரசு விமர்சித்திருந்தது. சாலைகள் துண்டிக்கப்பட்டன. மனிதர்கள், ஆடு, மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
29, 30, 31 December - very less chance of heavy rains in plains area of south Tamil Nadu. People in Thoothukudi, Nellai carry on with your regular work and don't panic.
— Tamil Nadu Weatherman (@praddy06) December 28, 2023
மழை நின்று 2 நாட்கள் வரை பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை. இந்நிலையில் இந்த பாதிப்பிலிருந்து நெல்லையும், தூத்துக்குடியும் மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில் ஆண்டின் இறுதி நாட்களான 30,31ம் தேதி தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால் தனியார் வானிலை ஆர்வலரான, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், கனமழைக்கு வாய்ப்பு குறைவு என விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் x சோஷியல் மீடியா தளத்தில், "வரும் 29,30 மற்றும் 31ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டமான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே மக்கள் பயப்பட தேவையில்லை. ஆனால் மாஞ்சோலை பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. இது இந்த பகுதியில் இயல்பான விஷயம்தான். மக்களின் அன்றாட பணிகளை இது பாதிக்காது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications