நீலகிரி பந்தலூர் பகுதியில் இடைவிடாமல் வரலாறு காணாத மழை.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவு
ஊட்டி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வருகிறது. அங்கு அடிக்கடி மேகங்கள் மொத்தமாக கூடி பெய்து வரும் மழை காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.. வீடுகள் உள்ள பகுதிகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. இயல்புக்கு மீறிய இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவினை பார்ப்போம்.
கேரளாவில் தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மழை பெய்யும் காலங்களில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. கூடலூர் பந்தலூர் பகுதிகளில் வழக்கத்தைவிட கடுமையாக மழை பெய்கிறது.

மோயார் உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களைவிட மீண்டும் அதிகப்படியான மழை பெய்து வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படியே அங்கு 80 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. இரவு 9 மணிக்கு மேலும் மழை பெய்து கொண்டே இருந்து.
மேகங்கள் எப்படி சென்னையில் நகர்ந்து நகர்ந்து வந்து 36 மணி நேரம் இடைவிடாமல் கடந்த ஆண்டு டிசம்பரில் மழை பெய்ததோ, அதுபோல் மேகங்கள்கேப்பே விடாமல் ஒன்று கூடி பந்தலூர் பகுதியில் வெளுத்து வாங்கி வருகிறது.இந்த மழை காரணமாக பந்தலூரில் உள்ள சாலைகளில் ஆறு போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. மிக அபாயகரமான அளவிற்கு பந்தலூர் பகுதியில் மழை பெய்து வருவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் வெளியிட்ட பதிவில், பந்தலூர் - தேவாலாவில் இன்னும் மேகங்கள் (இரவு 9 மணி நிலவரப்படியே) காணப்படுகின்றன. தமிழகத்தில் இந்தஇடம் மற்றும் மாஞ்சோலையை தவிர வேறு எங்கும் மழை இல்லை.. பந்தலூரில் பெய்துவரும் மழை மிகவும் வித்தியாசமானது. பல மணிநேரமாக பெய்து வருகிறது. கேரளாவில் கூட இந்த அளவிற்கு மழை பெய்யவில்லை.. 200 முதல் 300 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வெதர்மேன் பிரதீப்ஜான் இரவு 10 மணிக்கு மேல் வெளியிட்ட மற்றொரு பதிவில், பந்தலூரில் இதுக்கு எண்டே இல்லை போல, புதிதாக மேகக்கூட்டங்கள் நகர்ந்து செல்கின்றன என்று கூறியிருந்தார். நீலகிரி மாவட்டம் முழுவதுமே மழை பெய்து வரும் காரணத்தால், மக்கள் சாலைகளில் இரவில் செல்வது ஆபத்தானது என்கிறார்கள் மக்கள். குறிப்பாக பந்தலூர் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
வானிலை மையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பெய்துள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 8 செ.மீ., மேல் பவானியில் 7 செ.மீ. பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications