குளு குளுவென மாறும் தமிழக வானிலை.. இன்று முதல் 4 நாட்களுக்கு மழை! வெதர் அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வழக்கமாக கடும் வெயில் மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24, 25-ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் வெயிலின் தீவிரம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் முழுவதும் வெயில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3.1 டிகிரி செல்சியஸ் அதிகம்.
பரமத்திக்கு அடுத்து வேலூர் மற்றும் திருச்சியில் 105.98, ஈரோடு, மதுரை விமான நிலையத்தில் 105.8, திருத்தணி, சேலம், திருப்பத்தூரில் தலா 104.36, 104.18, 104 டிகிரி வெயில் வாட்டியிருக்கிறது. அதேபோல இன்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என்பதால், அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
குறிப்பாகச் சொல்வதெனில் அடுத்த 5 நாட்களுக்கு வட உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் இயல்பாக பதிவாகும் வெப்பநிலையை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும், புதுச்சேரி காரைக்காலில் வெப்ப நிலையை பொறுத்த அளவில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications