இனிதான் மழையின் ஆட்டம் ஆரம்பம்.. நவம்பர் 5 முதல் 7 வரை முக்கியமான நாள்!.. வெதர்மேன் சொன்ன அப்டேட்
சென்னை: சென்னையில் நாளை முதல் 7 ஆம் தேதி வரை முக்கியமான நாள் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த 3 நாட்களும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழை தீவிரமடையாமல் இருந்து வந்தது. அதாவது சில ஆண்டுகள் இந்த மழை சீசனின் போது, சீசன் தொடங்கியதுமே வெளுத்து வாங்கிய வரலாறெல்லாம் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது மழை தீவிரமடையாத நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் தென் பகுதிகளில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அது போல் மேற்கு மண்டலங்களை எடுத்துக் கொண்டால் திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது தொடர் ட்வீட்டுகளில் கூறியிருப்பதாவது: சென்னை மக்களே தயாராக இருங்கள். தமிழக கடலோர பகுதிகளில் அருகே வளி மண்டல சுழற்சி நிலவி வருவதால் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மழை பெய்யும். அது போல் சென்னை உள்பட தமிழகத்தின் அடுத்த 5 முதல் 6 நாட்களுக்கு மழை பெய்யும்.
நேற்றைய தினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். வரும்காலத்தில் சென்னையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்.
நவம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை முக்கியமான நாட்களாகும். அன்றைய தினம் மழையின் தீவிரத்தை கண்காணிக்க வேண்டும். ஆலந்தூர், சென்னை விமான நிலையம், மடிப்பாக்கம் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. சென்னை- பாண்டி- கடலூர்- காரைக்கால் முதல் நாகை வரை ஒட்டுமொத்த கடலோர பகுதிகளிலும் மழை விட்டுவிட்டு பெய்யும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications