யார் வூட்ல பார்ட்டி! இன்னிக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை தெரியுமா?முக்கிய அப்டேட் கொடுத்த வெதர்மேன்
சென்னை: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தற்போது விலகி வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க மறுக்கிறது.

இதனால் டெல்டாவில் பயிர்கள் நாசமாகி வருகின்றன. எனவே தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் உள்ள பயிர்களை காக்க மழை என்பது தேவை. தமிழகத்தில் மேற்கு திசை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வந்தாலும் டெல்டா பகுதிகளில் பெய்யவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தியாகும்.
இதனால் வடகிழக்கு பருவமழை எப்போது பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்டோபர் 20 ஆம் தேதிக்கு பிறகு சீசன் தொடங்கும் என்கிறார்கள். மேலும் சென்னை வானிலை மையமோ அக்டோபர் 3 ஆவது வாரம் அல்லது கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே தற்போது மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: தென் தமிழகத்திற்கும், மேற்கு தமிழகத்திற்கும் (கொங்கு), கேரளாவுக்கும் இன்று சிறப்பான நாள். தூத்துக்குடியும் ராமநாதபுரமும் இந்த மழை விருந்தில் இணைந்துவிட்டது. இன்றைய தினம் முதல் நாளை காலை வரை தென் தமிழகத்தில் மழை பெய்யும்.

தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, தேனி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும். ராமநாதபுரத்திலும் தூத்துக்குடியிலும் ஒரு சில இடங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இஅது போல் மேற்கு தமிழகத்தை பொருத்தமட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, வால்பாறை, திருப்பூர், கரூரில் மழை பெய்யும். நீலகிரியில் கனமழை பெய்யும்.
கேரளாவை எடுத்துக் கொண்டால் வடக்கு- மத்திய கேரளாவில் கனமழை பெய்யும். தெற்கு கேரளாவிலும் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெறும் 10 சதவீதம் மட்டுமே நீர் மட்டம் இருந்தது. தற்போது அணைகள் வேகமாக நிரம்புவதற்கு செப்டம்பர், அக்டோபர் மழைக்கு நன்றி சொல்வோம். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications