அடுத்த 15 நாட்களுக்கு சென்னையில் சுவாரஸ்யம் நடக்க போகுது.. திடீர் திடீர்னு நடக்கும்.. வெதர்மேன் புதிர்
சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு திடீர் வெயிலும் மழையும் இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளங்களில் கூறியிருப்பதாவது: மன்னார் வளைகுடா பகுதியில் காற்று குவிதல் இருப்பதால் ராமநாதபுரம் , தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும். தூத்துக்குடிக்கு இதுதான் முதல் பெரிய மழை.

அது போல் அந்த மாவட்டத்திற்கு பக்கத்தில் இருக்கும் மாவட்டங்கள் நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை முதல் கடலூர் வரை இன்று முதல் நல்ல மழை பெய்யும். அடுத்த 15 நாட்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான நாளாகும்.
திடீரென வெயில் இருக்கும். திடீரென மழை பெய்யும். எனவே சென்னை முதல் நாகை கடலோர பகுதிகளில் வசிப்போர் தினமும் கையில் குடையையும் ரெயின் கோட்டையும் கொண்டு செல்லுங்கள். அது போல் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
அது போல் மற்றொரு பதிவில் தூத்துக்குடி, நெல்லையின் மாஞ்சோலை, கன்னியாகுமரி பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது. மணிமுத்தாறு அணை இந்த ஆண்டு முதலில் நிரம்பும். வைகை, குமரியில் உள்ள அணைகளும் நிரம்பிவிட்ட நிலையில் தற்போது நெல்லையில் அணைகள் நிரம்ப இது முக்கியமான தருணம் என தெரிவித்துள்ளார்.
அது போல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. சாத்தான்குளத்தில் 12 செ.மீ. மழையும் திருச்செந்தூரில் 11 செ.மீ. மழையும் பெய்துள்ளது. நடப்பு வடகிழக்கு பருவமழை காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்முறையாக அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
அது போல் வெதர்மேன் மற்றொரு புதிய ட்வீட்டில் கூறியிருப்பதாவது: பட்டினப்பாக்கத்தில் மழை தொடங்கிவிட்டது. அங்கு அதிக மழை பெய்யும் என ஒரு மாடல் காட்டுகிறது என தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்த நிலையில் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications