மிக்ஜாம்! சொல்ல வார்த்தையே இல்லை! சென்னையை விட்டு போகாமல் அடம்பிடிக்கும் மேகங்கள்.. வெதர்மேன் ட்வீட்
சென்னை: சென்னையில் மேகங்கள் சூழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. மிக்ஜாம் புயலின் மெதுவான நகர்தலால் சென்னையில் இன்று மாலை அல்லது இரவு வரை நிறைய மழையை கொடுக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரக் கூடும். தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.
நாளை காலை தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் நள்ளிரவு முதல் சென்னையில் பெய்து வரும் மழையால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது.
சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அது போல் தண்டவாளத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக மின்சார ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளது. அபார்ட்மென்ட்களில் தண்ணீர் ஆறு போல் ஓடத் தொடங்கிவிட்டது. கார்கள் மூழ்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லை. மிக்ஜாம் புயல் கஜா, வர்தாவை போல் அதிக காற்றை கொடுக்காது.
ஆனால் மிகப்பெரிய மழையை கொடுக்கும் என்றார்கள். அதற்கேற்ப நிறைய மழையை கொடுத்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த புயலால் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னையில் 2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது கூட 33 செ.மீ. மழை பெய்தது. ஆனால் தற்போது அதிக மழை பொழிவை ஏற்படுத்தியுள்ளது. 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மேடவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கார், பைக் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்துச் செல்கிறது.
இந்த சூழலில் மழை எப்போது நிற்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயலின் கோர தாண்டவம் குறித்து சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சென்னை கடலோரத்தை புயலின் வெளி பகுதி நெருங்கி வருகிறது.மேற்கு பகுதியில் மேகங்கள் நகராமல் அடம் பிடிக்கின்றன.
சென்னை கடலோர பகுதி மீதே இருக்கின்றன. புயலானது மிகவும் வேகம் குறைந்து நகர்வதால் சென்னையில் இன்று மாலையும் இரவும் நல்ல மழை பொழிவை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications