ஆஹா சூப்பர்! அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கொட்ட போகுது மழை.. கோடை வெப்பம் கொஞ்சமாவது தணியும்
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தும் நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இருப்பினும், கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் மழையும் பெய்து வருகிறது.

வெப்பம்: கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், வட தமிழக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37°- 40 செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36 செய்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19'-20° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மற்றும் சேலத்தில் 39.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 363 செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழை இருக்கு: மேலும், சென்னை வானிலை மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மேலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று ஏப்ரல் 14ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மிதமான மழை: வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 19 மற்றும் 20ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம் அலர்ட்: வெப்பத்தைப் பொறுத்தவரை அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் படிப்படியாக 2-3 செய்சியஸ் உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அநேக இடங்களில் 37°40' செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் 34-38 செல்சியஸ் இருக்கக்கூடும்.
வரும் 18ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 50-60 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று ஏப்ரல் 14ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் வட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications