ஜில்லு ஜில்லுன்னு மழை கொட்டப்போகுது.. ஆனால் 2 நாட்கள் வெயிட் பண்ணனும் - வானிலை மையத்தின் குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும், 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "பிப்ரவரி 21 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.
உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 23 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக் கூடும். பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பிப்ரவரி 26 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.












Click it and Unblock the Notifications