வெப்பம் இன்னும் அதிகரிக்குமாம்..வானிலை அறிக்கையே இவ்வளவு வறட்சியா இருக்கே! கோடைக்கு முன்பே கொதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே கோடைக்கு இணையாக வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட கோடை மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம். அதில் மழை என்ற வார்த்தையே இல்லை. முழுக்க முழுக்க வறண்ட வானிலை, வெப்பம் தொடர்பான தகவல்களே இடம்பெற்று உள்ளன.

இன்று வெளியாகி இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது, “மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
அதிகபட்ச வெப்ப நிலை பற்றிய முன்னறிவிப்பு: மார்ச் 13 ஆம் தேதி மற்றும் மார்ச் 14 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். மார்ச் 13 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரை: அதிக வெப்ப நிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 34 - 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 25 - 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications