அடுத்த 3 மணி நேரம்.. இடி, மின்னலுடன் 25 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை.. விருதுநகருக்கு ஆரஞ்சு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நீலகிரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும், சேலம், மதுரை, தேனி, தென்காசி, திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. காலையில் இருந்தே மழை கொட்டியது. நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதற்கிடையே தான் அடுத்த 3 மணி நேரத்தில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது:-

25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
"தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை நீலகிரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, கரூர், நாமக்கல், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 23 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில் அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. இதேபோல் தேனி, தென்காசியில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
9 ஆம் தேதி வரை மழை தான்
வரும் 7 ஆம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 8 ஆம் தேதி வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-08-2025 மற்றும் 11-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு எப்படி?
சென்னையில் இன்று (05-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (06-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications