தத்தளிக்கும் திருநெல்வேலி.. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை
தூத்துக்குடி: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தமிழ்நாட்டில் திருவள்ளூர் தொடங்கி திருநெல்வேலி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று மாலைக்கு பிறகு மழை ஓய்ந்தது.

இதைத்தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மலையால் அங்குள்ள ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி ஆகிய அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணியில் உள்ள மருதூா் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருக்கிறது.

மேலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் மருதூா் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், அகரம், ஆழ்வாா்திருநகரி, ஆத்தூா், முக்காணி, புன்னக்காயல் வழியாக கடலில் கலக்கும். எனவே, பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம். பொதுப்பணித் துறை, காவல் துறை வருவாய்த் துறையினா், உள்ளூா் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தியை அறிவித்து வருகின்றனா்.
ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள், தேவைப்பட்டால் நிவாரண முகாம்களுக்கு வந்து தங்குமாறும், மக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
மேலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து குறித்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications