திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தை மூழ்கடித்த வெள்ளம்.. கரண்ட் கட்.. இடம் மாறிய கட்டுப்பாட்டு அறை
திருநெல்வேலி: விடாது பெய்து வரும் பேய்மழையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளநீர் மூழ்கடித்துள்ளது. கடந்த 30 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் திருநெல்வேலி மாவட்டமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
1992ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் 96.5 செ.மீ மழையே ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது. இதேபோல் தான் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ மழை பெய்து நிலைமையை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது.

பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளது. எங்கும் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவை நீரில் மூழ்கி காணப்படுவதால் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது
தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழை, பொதுமக்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத மழை என்பது கவனிக்கத்தக்கது. ஆறுகளில் அபாய கட்டத்தில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நெல்லையில் குடியிருப்புகளை மழை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. பொதுமக்கள் மீட்கப்பட்டு 245 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருவதால் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நேற்று இரவு முதல் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு அரசு சார்பில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. 28 பேரிடர் மீட்பு கால முகாம்களில் நேற்று இரவு வரை 1,694 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 107 ஜேசிபி எந்திரங்கள் 507 நிலை மீட்பு அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கோட்டை அளவில் இரண்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் வட்டளவில் எட்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
இது தவிர பேரிடர் மீட்பு பணிக்காக மாவட்ட முழுவதும் எட்டு குழுக்கல் அமைக்கப்பட்டு அலுவலர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் (2501012, 2501070, 1077) மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் (9489930261) அமைக்கப்பட்டு தொடர்ந்து மாவட்டத்தின் நிலையை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ள நீர் முற்றிலும் மூழ்கடித்துள்ளது. மின்சாரம் இல்லாத நிலையில் ஜெனரேட்டர் மூலமாக கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்த நிலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் கட்டுப்பாட்டு அறை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று நாள் முழுவதும் அதி கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது. அருகிலுள்ள ராமநாதபுரம், கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களுக்கும் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications