வெளுத்து கட்டப்போகுது.. இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் அலர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், காலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு கடலோர ஆந்திரம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதுபோன்ற வானிலை காரணங்களால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் அக்டோபர் 12 (இன்று) முதல் அக்டோபர் 17 வரை இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் நாளை கோவை, திருப்பூா் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்கையில் மழைக்கு ஏற்ப திட்டமிட்டு செல்வது சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications