வெடித்து கொட்டும் மேகங்கள்.. அடுத்த சில நாட்களுக்கு இந்த பக்கம் போயிடாதீங்க! வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரளாவில் இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "நீலகிரி, வால்பாறை பகுதிகளில் அதிக கனமழை மீண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், நெல்லியம், தேவாலா, அவலாஞ்சி, பர்சன் பள்ளத்தாக்கு, மேல் பவானி உள்ளிட்ட பகுதிகளில் மழை தீவிரமாக இருக்கும். ஆகவே இந்த பகுதிகளுக்கு ஜூன்.18 வரை, அதாவது அடுத்த மூன்று நாட்களுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை பெய்யும்.

கேரளாவை பொறுத்தவரை வயநாடு, இடுக்கி, காசர்கோடு, திரிசூர் மற்றும் பத்தினம்திட்டா மலைபகுதிகளுக்கு போவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல கர்நாடகாவை பொறுத்தவரை குடகு, சிக்மங்களூர், உடுப்பி, உத்தர கன்னடா, தட்சிண கன்னடா மற்றும் ஷிமொகா மலை பகுதிகளுக்கு போவதை ஜூன்.18ம் தேதி வரை தவிர்க்க வேண்டும்.
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் (KRS) மற்றும் ஹேமாவதி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மிக அதிக மழை பெய்துள்ளது. தலைக்காவிரியில் 218 மில்லிமீட்டர், பாகமண்டலாவில் (Bhagamandala) 131 மில்லிமீட்டர், ஹேமாவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான கொட்டிகேராவில் (Kottigehera) 147 மில்லிமீட்டர் என மழை பதிவாகியுள்ளது" என கூறியுள்ளார்.
கர்நாடகாவில் தற்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் 110 மி.மீ முதல் 210 மி.மீ வரை மழை பதிவாகியுள்ளது. மங்களூரில் 170 மி.மீ, பனம்பூரில் 210 மி.மீ, உடுப்பி மாவட்டத்தில் 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த ஓடியிருக்கிறது. தொடர் மழை காரணமாக கிருஷ்ணா நதியில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி சென்றிருக்கிறது. எனவே கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பெல்தங்கடி தாலுகாவில் கெட்டிகல்லு அருகே தேசிய நெடுஞ்சாலை-169ல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications