"இன்றும் இருக்கு சம்பவம்.." 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. சென்னையிலும் இருக்காம்! வானிலை மையம்
சென்னை: கடந்த சில நாட்களாகச் சென்னை மற்று சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த முக்கிய தகவலை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக திடீரென வெப்பம் குறைந்து பல இடங்களில் கணிசமாக மழை பெய்து வருகிறது.. குறிப்பாகச் சென்னை உட்பட வட தமிழகப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் நேற்றிரவு சென்னையில் கனமழை கொட்டியது.

அதற்கு முன்பு தொடர்ச்சியாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
மழை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 14) 14.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்கள்: அதேபோல நாளை (ஆகஸ்ட் 15) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 20 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூர் பகுதியில் 140 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல அம்பத்தூர், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் தலா 110 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர , பூந்தமல்லி, மதுரவாயல், முகலிவாக்கம், மலர் காலனி, வளசரவாக்கம், அடையார் சுற்றுச்சூழல் பூங்கா பகுதிகளிலும் தலா 100 மிமீ மழை பெய்துள்ளது. இப்படி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலும் நல்ல மழை கொட்டி இருக்கிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று ஆகஸ்ட் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல நாளை ஆகஸ்ட் 15இல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications