"தமிழகத்தில் இன்று பெரிதாக மழை இருக்காது! ஆனால் அதிகாலை நேரத்தில்.." வானிலை மையம் முக்கிய அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை மெல்லக் குறைந்து வருகிறது. சென்னை உட்பட மாநிலம் முழுக்க மழை கொட்டி வந்த நிலையில், இப்போது ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்கிறது. பெரும்பாலான இடங்களில் மழை குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவுகிறது. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.!
தமிழ்நாட்டில் பெரும்பாலும் இடங்களில் மழை குறைந்துவிட்டது. இப்போது தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நீலகிரி மற்றும் டெல்டாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்திருக்கிறது. மற்ற இடங்களில் குளிர் அதிகரித்துள்ளதே தவிர மழை எதுவும் பெரியளவில் இல்லை. வரும் நாட்களிலும் கூட கிட்டத்தட்ட இதே வானிலை தான் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் (11-12-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
டிசம்பர் 12 முதல் 14 வரை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். டிசம்பர் 15, 16 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 13 வரை தென்தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதர வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை" என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications