இரக்கமில்லையா.. ஈரோடு குமுறுது.. முட்டையை ரோட்டில் போட்டதும் அடுப்பே இல்லாமல் ஆம்லேட்டான ஆச்சரியம்!
ஈரோடு: ஈரோடு மக்களுக்கு மனசு மட்டுமல்ல.. உடம்பும் ஈரமாகவே இருக்கிறது.. அவ்வளவு வியர்வை.. சூரியன் நேரடியாக வாஸ்து பார்த்து குடியேறிய ஊர் போல் இருக்கிறது. காவிரி கரையோரம் உள்ள ஈரோடு, இதுவரை காணாத காட்சி எல்லாம் கண்டு வருகிறது. முட்டையை உடைத்து சாலையில ஊற்றி வித்தை காட்டும் நிலை எல்லாம் ஏற்பட்டுள்ளது.
கோடை வெயில் தமிழ்நாட்டில் உக்கிரமாக இருக்கிறது. வெப்பநிலை கோடைக்காலத்தில் மிக கடுமையாக அதிகரிக்க சில காரணம் இருக்கிறது. அதவாது பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடல் பகுதிகளின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் தான் காரணம் ஆகும். அதேபோல் காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் வெயில் வழக்கத்தைவிட தமிழகத்தில் அதிகமாக உள்ளது.

குறிப்பாக ஈரோடு, சேலம், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருத்தணி உள்ளிட்ட மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கிறது. அக்னி வெயில் தொடங்கும் முன்பே 110 டிகிரியை தொடும் அளவுக்கு வெயில் பல இடங்களில் அதிகமாக உள்ளது,
கடந்த இரண்டு நாள் முன்பு ஈரோட்டில் 109 டிகிரியும், நேற்று முன்தினம் சேலத்தில் 108 டிகிரியும் வெயில் பதிவானது. இந்த சூழலில் இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 வட மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 4 முதல் 7 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடுமையான வெயில் காரணமாக மக்கள் தவித்து வருகிறார்கள். ஈரோட்டில் வெயில் உக்கிரமாக இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சாலையில் முட்டையை உடைத்து ஊற்றுகிறார்கள். உடைத்து ஊற்றப்பட்ட முட்டை ஆம்லேட்டாக மாறியது போல் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வீடியோவில் ஏற்கனவே ரெடியா ஆம்லேட்டை கட் செய்து, வீடியோவில் எடிட் செய்து ஒட்டவைத்திருப்பதாக கூறப்படுகிறது. வெயிலின் உக்கரத்தை காட்ட, இப்படி போலியான வீடியோவை சிலர் அடிக்கடி பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் முட்டை உடைத்து ஊற்றப்பட்டால், ஆம்லேட் ஆகாது என்றாலும், கால் கண்டிப்பாக வெந்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. இரண்டு நிமிடம் சாலையில் நின்றால் அல்லது மொட்டை மாடியில் நின்றால், கால் புண்ணாகிவிடும் என்பது நிச்சயம். மண்டையும் புண்ணாகும் வாய்ப்பு உள்ளது. தண்ணீர் நிறைய அருந்துவதே இதற்கு தீர்வாகும்.












Click it and Unblock the Notifications