வங்கக் கடலில் பஞ்சு மெத்தை.. கோடையில் குளுகுளு அப்டேட் கொடுத்த ஐஎம்டி! இனி உங்க ஊரும் ஊட்டி தான்!
சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் விதமாக கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் வங்கக்கடலில் 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்தது. அதற்கு பிறகு மழை முடிவடைந்த நிலையில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் இதுவரை 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. குறிப்பாக திருப்பூர், கோவை, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கிடையே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் வங்கக்கடல் மற்றும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 36 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகும் எனவும் கூறி இருந்தது. ஆனால் கணித்ததற்கு முன்னதாகவே தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய மழை பெய்யும் என மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications