COMK Update: டெல்டா விவசாயிகளின் கவனத்திற்கு.. மழை கொட்டப்போகுது! நெல் அறுவடையை சீக்கிரம் முடிங்க!
சென்னை: வங்கக்கடலில் நில நடுக்கோட்டுக்கு அருகில், மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும். எனவே டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான COMK விடுத்திருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "வங்கக்கடலின் நிலநடுக்கோட்டுப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

லேசான பனிமூட்டம்
இதன் காரணமாக பிப்.18ம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். அதே நேரம் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான பனிமூட்டம் நிலவலாம்.
டெல்டா மாவட்டங்களில் மழை
பிப்.18-19ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நகரும். இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகள் குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
பிப்.20-23ம் தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை இந்த நாட்களில் பெய்யும். எனவே அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களை உடனே அறுவடை செய்துவிடுவது நல்லது.
மழையின் தாக்கம்
இந்த குறைந்த காற்றழுத்த பகுதியானது எந்த திசையில் நகர்கிறது என்பதை பொறுத்துதான், மழையின் தீவிரம் மாறுபடும். குறிப்பாக இது இலங்கை கடற்கரையை நோக்கி நகர இருப்பதால், தென் மாவட்டங்களுக்கு மழை அதிகமாக கிடைக்கலாம்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications