இந்த நாள் சென்னைக்கானது.. நாளை முதல் தமிழ்நாட்டுக்கே “ஜூஸ்” - தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: மழைக்காக தமிழ்நாடே காத்திருக்கும் நிலையில், இந்த நாள் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கானது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "இந்த நாள் KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) மாவட்டங்களுக்கானது. மாதத்தின் மற்ற நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, டெல்டா, உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே ஜூஸியாக இருக்கும். இடி மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது." என்றார்.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.09.2023 முதல் 20.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்று இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17.09.2023 முதல் 19.09.2023 வரை: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 - 3 நாட்களில் மேற்கு திசையில் நகரக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications