தமிழகம் முழுக்க சம்பவம் செய்யும் வெயில்! ஆனா இந்த ஒரு பகுதியில் மட்டும் மழை இருக்கு! எங்கு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் சில மாவட்டங்களில் கொஞ்சம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் பெரியளவில் மழை பதிவாகவில்லை..

ஈரோட்டில் தான் வெப்பம் மோசம்: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. 9 இடங்களில் வெப்பம் 40.0° செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 42.2° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ், சேலத்தில் 41.7° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5° செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தர்மபுரியில் 40.7° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ், திருச்சியில் 40.2° செல்சியஸ், திருத்தணி மற்றும் வேலூரில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° - 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° - 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்: அடுத்த ஒரு வாரத்திற்கு நிலவும் வானிலை குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று முதல் ஏப்ரல் 29 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மழை இருக்கு: ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 2ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும். வரும் 30ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: 26.04.2024 முதல் 30.04.2024 வரை அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications