மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போது "இப்படி" நடந்தால் நம்பி வெளியே போய்டாதீங்க.. வார்னிங்!
சென்னை: மிக்ஜாம் புயல் வடதமிழகத்திற்கு அருகே நெருங்கி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

• வீட்டின் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
• புயல் காலகட்டத்தில் 4 நாட்களுக்கு தேவையான பொருட்களான உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்
• வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.
• வீட்டில் உள்ளவர்கள் காய்ச்சிய குடிநீரை பருகவேண்டும்,
மரத்தடியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.
• புயல் கரையைக் கடக்கும்போது வாகனத்தில் பயணிக்க கூடாது. புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.
• புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும், அதனால் புயல் கரையை கடந்துவிட்டதாக எண்ணக்கூடாது. ஏனெனில் மந்த நிலைக்குப் பின் மீண்டும் சூறைக்காற்று வீசும். புயல் கரையை கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும்.
புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும், பீதியையும் யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளுக்கு வானொலி தொலைக்காட்சி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல் மற்றும் ட்விட்டரை முறையாக பார்க்கவும்.
• புயல் எச்சரிக்கை என்பதால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்கவும்; குழந்தைகளை தண்ணீரில் விளையாட அனுமதிக்க வேண்டாம்.
• கனமழை பெய்யும் போது மரத்திற்கு அடியில் நிற்க வேண்டாம்.
• அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தொட்டிகளில் போதுமான நீரை தேக்கி வைத்துக் கொள்வது நல்லது.
• மழையின் போது மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ளதால் மின்விளக்கு, செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளவும்;
தேவையான மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை வைத்திருக்கவும்.
• வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அதிகாரிகள் அறிவுறுத்தும் போது நிவாரண முகாம்களுக்கு செல்லவும்.
மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்
• புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
• இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்
• செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.












Click it and Unblock the Notifications