ஆஹா.. தீபாவளிக்கு மறுநாளே சம்பவம்.. இன்று வெளியே செல்லும் முன்பு கவனம்! வெதர்மேன் தந்த அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தீபாவளி நாளான நேற்றும் கூட பல இடங்களில் கணிசமான அளவுக்கு மழை பெய்தது. இதற்கிடையே இன்றைய தினம் எங்கெல்லாம் மழை பெய்யும்.. குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகருக்கு மழை இருக்கிறதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
பருவமழை சீசன் தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. இப்படி தொடர்ச்சியாக மழை பெய்வதால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் கணிசமாக நிரம்பியுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இருப்பினும், சென்னையில் அடுத்த 2 மாதங்கள் தான் நல்ல மழை கொட்டும் என்பதால் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்: இதற்கிடையே தீபாவளிக்கு மறுநாளான இன்று எங்கெல்லாம் மழை இருக்கிறது.. குறிப்பாகச் சென்னைக்கு மழை இருக்கிறதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார். சென்னையில் இன்று ஆங்காங்கே தான் மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இன்று எந்த பகுதிகள் எல்லாம் ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். குறிப்பாகக் குற்றாலம் செல்வோருக்கும் எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார்.
எங்கெல்லாம் மழை இருக்கு: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சென்னையில் இன்று மீண்டும் அங்கும் இங்குமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் குறுகிய மற்றும் தீவிரமான மழை இருக்கும். இன்று மேற்கு தமிழ்நாடு, உள் தமிழ்நாடு மற்றும் தென் தமிழ்நாடு பகுதிகள் தான் ஹாட்ஸ்பாட். கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, கரூர், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
கன்னியாகுமரி, திருவனந்தபுரம், இடுக்கி, வால்பாறை, தென்காசி, நெல்லை, தேனி, கொடைக்கானல் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். கனமழையால் இன்று, குற்றாலம் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்" என்று பதிவிட்டுள்ளார். எனவே, லாங் வீக் எண்டில் இன்று வெளியே செல்ல திட்டமிட்டிருந்தால் இந்த அலர்ட்டை பொறுத்து உங்கள் திட்டத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எங்கெல்லாம் மழை நாளைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications